STPM Sem 1. குயில் பாட்டு - மாதிரி வினா விடை
குயில் பாட்டு – சூழலமைவு கேள்விகள்.
1. புகழே புகழே புகழே;
புகழுக்கே யோர்
புரை யுண்டாயின்
இகழே இகழே இகழே....
அ. இவ்வரிகள் இடம் பெற்ற நூல், இயற்றிய கவிஞர், கூற்று போன்றவற்றைக்
குறிப்பிடுக .
குயில்பாட்டு எனும் குறுங்காவியத்தை
இயற்றியவர் மகாகவி பாரதியார். அவரின் கற்பனையில் மலர்ந்த இந்தக் காவியத்தில்
குயில் கவிஞரிடத்தில் உரைப்பதுபோல் இவ்வரிகள் தோன்றியுள்ளன.
ஆ. இப்பாடல் வரிகள் தோன்றிய சூழலை விளக்குக. ( 5 பு )
இனிய ஒரு காலைப் பொழுதில் தென்புதுவை எனும்
நகரின் மேற்கே அமைந்துள்ள ஒரு மாஞ்சோலையில் வேடர்கள் நுழையவில்லை. அந்நேரத்தில்
பறவைகள் எல்லாம் தம்மை மறந்து பேடைக்குயில் ஒன்றின் பாடலைக்
கேட்டுக்கொண்டிருக்கின்றன. காதலின் மகத்துவத்துவத்தைக் குயில் எடுத்துரைக்கும்
சூழலில் மேற்காணும் வரிகள் இடம் பெற்றுள்ளன.
இ. ‘புரையுண்டாயின்’ எனும் சொல்லின் பொருளை விளக்குக. (
5 பு )
மனிதன் தன் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு
காரியமும் புகழை எதிர்பார்த்தே செய்யப் படுகிறது. ஆனால் புகழ் பெற்ற ஒருவர் கீழான
ஒரு செயலில் ஈடுபட்டு விட்டால் ஏற்கனவே பெற்ற புகழ் மறைந்து இகழ்ச்சியே மிஞ்சி
நிற்கும்.
ஈ. கவிஞர் பேடைக்குயிலைச் சந்தித்த விதத்தினை
விவரித்து எழுதுக. ( 12 பு )
2. பேடே..திரவியமே..பேரின்பப்
பாட்டுடையாய் !
ஏழுலகம் இன்பத்தீ ஏற்றும் திறனுடையாய்..!
பீழையுனக் கெய்தியதேன்..? பேசாய்...!
அ. இவ்வரிகள் இடம் பெற்ற நூல், இயற்றிய கவிஞர், கூற்று போன்றவற்றைக்
குறிப்பிடுக
குயில்பாட்டு எனும் குறுங்காவியத்தை
இயற்றியவர் மகாகவி பாரதியார். அவரின் கற்பனையில் மலர்ந்த இந்தக் காவியத்தில்
கவிஞர் குயிலிடத்தில் கேட்பதுபோல் இவ்வரிகள் தோன்றியுள்ளன.
ஆ. இப்பாடல் வரிகள் தோன்றிய சூழலை விளக்குக. ( 5 பு )
தென்புதுவை எனும் நகரின் மேற்கே அமைந்துள்ள
மாஞ்சோலையில் குயில் ஒன்று பாடிக் கொண்டிருக்கிறது. அதன் குரல் இனிமையில் சோலைப்
பறவைகள் அனைத்தும் தன்னை மறந்து அமர்ந்திருக்கின்றன. ஆயினும் பேடைகுயிலின் குரலில்
சோகம் நிறைந்திருப்பதை உணர்ந்த கவிஞர் அதன் காரணத்தை அறியும் நோக்கத்தில்
மேற்கண்டவாறு வினவும் சூழலில் இவ்வரிகள் தோன்றியுள்ளன.
இ. “ஏழுலகம் இன்பத்தீ..” எனும் சொற்றொடரின் பொருளை விளக்குக ( 5
பு )
சோலையில் பாடிக்கொண்டிருந்த குயிலின்
குரலில் ஏதோ ஒரு மாயம் இருந்தது. அதனால்தான் வானத்துப் பறவையினங்களோடு, மனிதனாகிய கவிஞரும் குயிலின் குரலில் மயங்குகிறார். பூமியின் சோலை வனத்தோடு
தேவலோகமும் பேடைக்குயிலின் குரலில் மயங்குவதையே கொடுக்கப் பட்டுள்ள சொற்றொடர்
விளக்குகிறது.
ஈ. குயிலைக் கவர்ந்த விஷயங்களாகக் குறிப்பிடுவனவற்றைத்
தொகுத்து எழுதுக. ( 12 பு )
3. ‘ காதல் வழிதான் கரடுமுர டாமென்பார்,
சோதித் திருவிழியீர்.....! துன்பக் கடலினிலே,
நல்லுறுதி கொண்டதோர் நாவாய்போல்
வந்திட்டீர்..!”
அ. இவ்வரிகள் இடம் பெற்ற நூல், இயற்றிய கவிஞர், கூற்று போன்றவற்றைக்
குறிப்பிடுக
குயில்பாட்டு எனும் குறுங்காவியத்தை இயற்றியவர்
மகாகவி பாரதியார். அவரின் கற்பனையில் மலர்ந்த இந்தக் காவியத்தில் குயில்
கவிஞரிடத்தில் கூறுவதுபோல் இவ்வரிகள் தோன்றியுள்ளன.
ஆ. இப்பாடல் வரிகள் தோன்றிய சூழலை விளக்குக. ( 5 பு )
மாஞ்சோலையொன்றில் இனிமையாகப் பாடிக்
கொண்டிருந்த பேடைக்குயிலின் குரலில் சோகம் இழையோடுவதைக் கண்ட கவிஞர், அதன் காரணம் வினவுகிறார். குயிலும் தான் மனிதக் காதலை வேண்டி மனம்
உருகுவதாய்க் கூற, அக்கணமே தானும் குயிலாய் மாறி அதன் காதலைப் பெற விழையும்
ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார் கவிஞர். இதனால் பெரிதும் மனம் மகிழ்ந்த குயில்
மேற்கண்டவாறு பதில் உரைக்கிறது.
இ. கோடிடப்பட்ட வரியின் பொருளை விளக்குக. ( 5 பு )
காதல் என்பது அவ்வளவு சுலபமாய் வெற்றியில்
முடியக் கூடிய விஷயமல்ல. காதலில் கட்டுண்ட இருவரும் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்ள
வேண்டியிருக்கும். பல பிரச்சனைகளையும் தடைகளையும் மனம் தளராமல் தாண்டி வந்தால்தான்
காதலர் இருவரும் திருமண பந்தத்தில் இணைய வாய்ப்புண்டு என்பதையே இவ்வரிகள்
உணர்த்துகின்றன்.
ஈ. கவிஞரிடத்தில்
காதல் ஏற்படுத்திய விளைவுகளை விவரித்து எழுதுக (
12 பு )
4. “புத்திமனஞ்
சித்தம் புலனொன் றறியாமல்
வித்தைசெயும் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென
காலிரண்டுங் கொண்டு கடுகவும் நான் சோலையிலே
நீலிதனைக் காண வந்தேன்...!”
அ. இவ்வரிகள் இடம் பெற்ற நூல், இயற்றிய கவிஞர், கூற்று போன்றவற்றைக்
குறிப்பிடுக
குயில்பாட்டு எனும் குறுங்காவியத்தை
இயற்றியவர் மகாகவி பாரதியார். அவரின் கற்பனையில் மலர்ந்த இந்தக் காவியத்தில்
கவிஞரின் தன்மனக் கூற்றாக இவ்வரிகள் தோன்றியுள்ளன.
ஆ. இப்பாடல் வரிகள் தோன்றிய சூழலை விளக்குக. ( 5 பு )
மாஞ்சோலையொன்றில் சந்தித்த பேடைக்குயிலின்
இனிமையான பாட்டிலும் அதன் தண்மையான குரலிலும் தன் மனதைப் பறிகொடுக்கின்றார் கவிஞர்.
வெளியில் சென்றிருந்த பறவையெல்லாம்
சோலைக்குத் திரும்பி வந்துவிட்டதால் குயிலும் கவிஞரும் பேசுவது தடையாகிறது .
அதனால் அந்தப் பேடைகுயில் அடுத்த நான்காம் நாளில் மீண்டும் சந்திக்கலாம்
எனக்கூறிவிட, வீடு திரும்பிய கவிஞருக்கு நான்கு நாட்கள் வரை
காத்திருக்கப் பொறுமை இல்லை. எனவே மறுநாளே தன் காதலியாகிய குயிலைக் காண விரைந்தோடி
வந்த சூழலில் இவ்வரிகள் இடம் பெற்றுள்ளன.
இ.
கோடிடப்பட்ட வரியின் பொருளை விளக்கி எழுதுக. (
5 பு )
குயிலிடத்தில் காதல்
வயப்பட்ட கவிஞருக்கு புத்தி, மனம், சித்தம் எதுவும் வேலை செய்யவில்லை. புலன்களின் இயக்கத்தைக்
கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் தன் நிலை இழந்துவிட்ட கவிஞர், வித்தைக்காரன் ஒருவன் ஆட்டிவைக்கும் பொம்மைபோல செயல்பட்டதையே கோடிடப்பட்ட வரி
உணர்த்துகிறது.
ஈ. குயிலின்
பாட்டு எனும் தலைப்பில் வெளிப்படும் கருத்துகளை எழுதுக. ( 12 பு )
5. “சைவசுத்த போசனமும் சாதுரியப்
பார்வைகளும் –
வானரர்போல் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்....”
அ. இவ்வரிகள் இடம் பெற்ற நூல், இயற்றிய கவிஞர், கூற்று போன்றவற்றைக்
குறிப்பிடுக
குயில்பாட்டு எனும் குறுங்காவியத்தை
இயற்றியவர் மகாகவி பாரதியார். அவரின் கற்பனையில் மலர்ந்த இந்தக் காவியத்தில்
குயில் குரங்கிடம் பேசுவதாக இவ்வரிகள் அமைந்துள்ளன.
ஆ. இப்பாடல் வரிகள் தோன்றிய சூழலை விளக்குக. ( 5 பு )
பேடைக்குயிலிடம் தன் மனதைப் பறிகொடுத்த கவிஞர்,
அக்குயில் குறிப்பிட்ட நான்காம் நாள்வரை பொறுத்திருக்க இயலாமல் மறுநாளே தான்
குயிலைச் சந்தித்து உரையாடிய மாஞ்சோலைக்குச்
செல்கிறார். ஆர்வம் பொங்க சோலையெங்கும் குயிலைத் தேடி,
இறுதியில் குயில் ஒரு குரங்கிடம் ஊன் உருகப் பேசுவதைக் காண்கிறார். குயிலையும்
குரங்கையும் அவ்விடத்திலேயே கொன்றுவிடத் துடித்தாலும் குயில் பேசுவதைக் கேட்கும்
ஆவலில் கவிஞர் ஒரு பெரிய மரத்தின் பின்னால் மறைந்து செவிமடுக்கும் வேளையில்
குரங்கிடம் குயில் கூறும் கூற்றாக இவ்வரிகள் இடம் பெற்றுள்ளன.
இ. கோடிடப்பட்ட வரியின்
பொருளை விளக்கி எழுதுக. ( 5 பு )
கவிஞரிடத்தில் பல மயக்கு
மொழி பேசிய குயில், அதே பாணியில் குரங்கிடமும் பேசுகிறது. குரங்கு இனம்
பலவகையிலும் மனிதரைவிட மேலானது என்றாலும் அனைத்துக் குரங்கிலும் மேலாக, மிகச் சிறந்ததாக விளங்கும் அந்தக் குரங்கைத் தான் அடைந்ததாகக் கூறி
பெருமைப்பட்டுக் கொள்கிறது.
ஈ.
மனிதரையும் குரங்கையும் ஒப்பிட்டுக் குயில் கூறியவற்றைத் தொகுத்திடுக. (12 பு )
Comments
Post a Comment